கவிதைகளல்லாதவை 1.2

பாதி நனைந்தும் நனையாமலும் 
தலை சிலிர்த்து நீர் தெறிக்க
பாய்ந்து வந்த  பூனை
வாசலில் ஆளொன்று
அமர்ந்திருக்கக் கண்டு
மிரண்டபடி மீண்டும்
மழை நோக்கி பின்வாங்க

தான் ஏதுமறியாதவர் போலெழுந்து
அவ்விடம் விட்டு நகர்ந்ததும்
பவ்யமாய் நடந்து
வெதுவெதுப்பான ஓரிடத்தை
அப்பூனை தனதாக்கிக்கொள்ள
புன்சிரிப்புடன்
மீண்டும் வாசலில் சென்றமர்ந்து
மழை ரசிக்கத் துவங்குகிறாள்
அச்சிறுமி

நீங்கள் வாசிக்க காத்திருக்கும்
கவிதை
இங்கிருந்து தான் ஆரம்பமாகிறது...

கவிதைகளல்லாதவை - 1.1

என்னை கவிஞனென
நிரூபிக்க பட்டாம்பூச்சிகளையும்
சில இறகுகளையும்
சேகரித்து வந்தால் போதுமென்று நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறீர்கள்

நானோ
அது எதுவமறியாமல்
நெருப்புமிழும் பறவைகளை
தேடியலைந்துக் கொண்டிருக்கிறேன். .

                      

கவிதைகளல்லாதவை

கவிதைகளென்று பெயரிடப்பட்ட
வார்த்தைகளின் குவியலொன்று
சிறகுகள் முழைத்து
மலையுச்சியை நோக்கி
பறந்து சென்றதையறிந்து
கவலைப்படும் நீங்கள்

சிறகுகளிலிருந்து உதிர்ந்த
இறகுகள் சேகரித்தபடி
மலையுச்சியை தாண்டி அவள்
சென்று கொண்டிருப்பதை
அறியாமலிருத்தல் நலம்.

                      


நீ அல்லாத நீ !

ரயில் ஜன்னலோர இருக்கையிலிருந்து
வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் பெண்

பஸ்ஸில் நடத்துனரிடம்
மீதி ஐம்பது காசுக்காக சண்டையிட்டுக்கொண்டிருக்கும்
பெண்

காதில் ஹெட்செட் பொருத்தி
பாடல் வெளியில் கேட்குமளவிற்கு சத்தம் வைத்து ரசித்துக் கேட்கும்
பெண்

தியேட்டரில் தனக்கு பிடித்த நடிகனை
சிறப்பு தோற்றத்தில் பார்த்ததும்
பரவசத்தில் விசிலடிக்கும்
பெண்

நேரமாகிவிட்டதென காலையுணவு சரியாக உண்ணாமல்
அம்மாவிடமிருந்து திட்டு வாங்கிக்கொண்டே
வீட்டிலிருந்து வெளியிலிறங்கும்
பெண்

பள்ளி செல்லும் வாய்பேசா சிறுகுழந்தைக்கு
தினமும் மறவாமல் ஒரு சாக்லெட்டும்
கூடவே மறவாமல் ஒரு முத்தமும் பரிமாறும்
பெண்

போக்குவரத்து நெரிசலில்
தன் ஸ்கூட்டியை முன்னால் நின்ற வண்டியில்
உரசிவிட்டு மன்னிப்பு கேட்கும்
பெண்

அலைகள் துரத்தியும்
அலைகளை துரத்தியும் விளையாடும்
பெண்

பூங்காவில் ஊஞ்சலை கண்டவுடன்
தன் வயது மறந்து சிறுமியாகும்
பெண்

என
எல்லா நாளும்
எல்லா இடத்தும்
யாராவது ஞாபகப்படுத்திக் கொண்டேதானிருக்கிறார்கள்
நீயல்லாத உன்னை.