"மழை"யாலானவை..



நீ அடங்க மறுத்த
பொழுதுகளைத்தான் ஞாபகப்படுத்துகிறது
ஒவ்வொரு அடை மழையும்.. 





என்றோ மழை நாளில் 
நீ வந்து சென்ற ஞாபகத்தை 
பத்திரமாய் பதித்து வைத்திருக்கிறது 
என் வீட்டு முற்றம் 
உன் காலடி சுவடுகளாய். .






பெய்யும் முதல் மழையில் 
மண் வாசம் வீசுமாம் 
எனக்கோ 
விழுகிற ஒவ்வொரு துளியிலும் 
உன்வாசமே வீசுகிறது 







கவிதைகள் கரையும் 
சிறு தூறல்களுக்கு 
கொஞ்சம் கூட 
சளைத்ததாய் இல்லை 
எங்கிருந்தோ காற்றில் 
ஆடியசைந்து வரும் 
சில இறகுகள்..







மழை 
எப்போதும் போல 
சுயம் தொலைக்காமல் 
மழையாகவே 
பெய்து கொண்டிருக்கிறது 
நான் தான் 
கரைந்து கொண்டிருக்கிறேன் 
துளி 
து
ளி
யா
ய்.