கடைசியாய் ஒரு கவிதை..

கடைசியாய் ஒரு கவிதை எழுதலாமென
எனை மறந்த உலகை நான் மறந்து
வார்த்தைகளை வரிசைப்படுத்த துவங்கினேன்

எவ்வளவு முயற்சித்தும்
ஒத்துழைக்க முடியாதென
அடம்பிடித்தன பிடிவாத வார்த்தைகள்

பொறுமை காத்து பொறுக்க முடியாமல்
கோபத்தை கொட்டித் தீர்த்தேன்
வார்த்தைகளிடம்

எவ்வித அசைவுமின்றி அசையாமல்
ஆணியடித்தது போல் மௌனமாய் 
நின்று கொண்டிருந்தன வார்த்தைகளனைத்தும்

ஆத்திரப்பட்டு பயனில்லை என்றறிந்த பின்
சுற்றும் முற்றும் பார்வை வீசி
பார்வையாளர்கள் எவருமில்லையென
உறுதி செய்து என் உறுதி குலைத்தேன்
வார்த்தைத் தலைவனிடம்.

கை கூப்பி
தலை சாய்த்து
வெட்கம் விட்டு வேண்டிக்கொண்டேன்
காதலில்லாமல்
காமம் கலவாமல்
கடைசியாய் ஒரு கவிதை வேண்டுமென

மௌனம் ஆக்கிரமித்த சிறு இடைவேளைக்கு பின்
ஒட்டுமொத்த வார்த்தைகளும் ஒன்றாய் சேர்ந்து
ஒரே குரலில் சொல்லத்துவங்கின

"உருவமில்லாமல் உன்னில் ஒளிந்திருக்கும்
உன்னவளின் நினைவுகளின்
கடைசித்துளி வரை
துடைத்தெறிந்து விட்டு வா"  என்று...

மீண்டுமொருமுறை  மௌனம் ஆக்கிரமிக்க
கலங்கிய கண்களுடன்
"வேறு வழியே இல்லையா என்றேன்"

ஏளனமாய் என்னைப்பார்த்து
அதிகாரத் தோரணையில்
"சொன்னதைச் செய்
இல்லையேல் என்னிடம் வரதே" என்று கூறி
நடக்கதுவங்கின வார்த்தைகளனைத்தும்
பாதைகளற்ற ஒரு ஒற்றையடி  பாதையில்

அந்நேரம்
"இனி கவிதையேதும் எழுதுவதில்லையென
முடிவெடுத்திருந்தது என் மனது"

நா
    ன
        றி
            யா
                  ம
                      ல்....